Tuesday, 12 February 2013

காதல்


அதுவா...! - காதல் கவிதை

அதுவா...! 

ஒரு முறை என்னைப் பார் 
என்னை உன் விழிகளால் விழுங்கு 
மெளனத்தால் அரவணை 
காதுகளுக்குள் கிசு கிசுப்பாய் 
காதல் மொழி பேசு... 
சில முத்தங்கள் மூலம் எனக்குள் 
காதலை பரவ விடு... 
சப்தமில்லாமல் சிரி... 
உனக்கானவன் நான் தான் 
என்ற உரிமையில்..என்னை 
முழுதுமாய் உடைத்துப் போடு! 

பற்றிப் பரவும் கொடியின் 
காதலில் லயித்துக் கிடக்கும் 
ஒரு மரம் போல 
உன் மொத்தக் காதலும் 
என்னை மூர்ச்சையாக்கிப் போனதில் 
உணர்வுகளின் சங்கமத்தில் 
இசைக்கும் கீதம்... என் உயிரின் 
மூலம் தொட்டு தடவுகிறது....! 

என் பெயர் சொல்லி 
ஓராயிரம் முறை அழைத்து 
உன் காதலை என் மீது தெளிக்கிறாய்.. 
நானோ பார்வைகள் தொலைத்து 
சப்தங்கள் இழந்து...சுவாசத்தினூடே 
உன் நினைவுகளை என்னுள் பரவவிட்டு 
மழை வாங்கும் நிலமாய்... 
மெளனித்துக் கிடக்கிறேன்..! 

No comments:

Post a Comment